உலகிலுள்ள சிறந்த நூறு தாழ்வு மனப்பாண்மையாளர்களை பட்டியலிட்டால், அந்த பட்டியலில் நானும் இடம்பெறலாம்..அவ்வளவு தாழ்வு மனபபாண்மை என்னுள் இருந்தது. அது ஒரு கொடிய நோய் கொஞ்ச்ம் கொஞ்சமாய் ஆளைக்கொல்லக்கூடியது..இப்போது அதிலிருந்து மீண்டுகொண்டுருக்கிறேன்,சீக்கிரம் மீண்டு விடுவேன்!! எனக்குள் இருந்தது தாழ்வு மனப்பாண்மைதான் என்பதை நீண்ட நாட்களுக்குப்பிறகுதான் புரிந்துகொண்டேன்..அதற்கு காரணம் வாசிப்பும் நல்ல சில சினிமாக்களும்தான்.. வாசிப்பு என்பது ஒரு மனிதனை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு அற்புதமான ஆயுதம்..
பால்ய கால பள்ளிப்பருவம் எல்லோருக்கும் கொண்டாட்டம் நிறைந்தது.. ஆனால் எனக்கு அது நரகம்!! ஆமாம், அந்தக்காலங்களில் என்னுடன் படித்த சக மாணவிகளுடன் நான் மொத்தமாக பேசிய வார்த்தைகளை ஒரு A4 சைஸ் தாளில் எழுதிவிடலாம் காரணம் எனது தாழ்வு மனப்பாண்மை. எல்லோரைப்போலவும் சிரிக்கனும்,பேசனும்,பழகனும் என்ற ஆசையும்,கற்பனையும் தாராளமாகவே இருக்கும்.. ஆனாலும் பக்கத்தில் சென்று பேச தயக்கம்..காரணம் எனது உடலில் இருந்த ஒரு சிறிய குறைபாடுதான்..(என்னவென்று சொல்லவிரும்பவில்லை) ஆனால் அதெல்லாம் ஒரு விடயமே அல்ல எனபது இப்போதுதான் புரிகிறது எனக்கு. சில விடயங்களை காலம் தாண்டித்தான் புரிய வைக்கிறது இந்த உலகம்!!
அப்படி எனது ஆயிரக்கணக்கான ஆசைகளும், ஆதங்கங்களும், கற்பனைகளும் வெளிவந்ததேயில்லை. எல்லாம் உள்ளேயே இறந்து போய்விட்டன.. நான் நிஜத்தில் வாழ்ந்ததைவிட கற்பனைகளிலேயே அதிகம் வாழ்ந்திருக்கிறேன்..மனதுக்கு பிடித்தவர்களை மனதில் நினைத்துக்கொண்டு அவர்களுடன் பேசுவதாய் கற்பனையிலே பேசியிருக்கிறேன்,சிரித்திருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் நானே பயந்திருக்கிறேன் எனக்கு மனநோய் பைத்தியம் பிடித்து விடுமோ என..நல்லவேளை அப்பிடி நடக்கவில்லை. காரணம் நான் படித்த சூழலும் அவ்வாறு, வெளியூரில் சென்று படிக்கும் போது நிறைய பேர் விடுதியில் தங்கியே படிப்பார்கள்.. சிலர் மாத்திரம் வீடுகளில் தங்கி படிப்பார்கள். நானும் விடுதியில் தங்க தயங்க ஒரு வீட்டில் சேர்த்து சேர்த்துவிட்டார்கள்.. உயர்தரம்(A/L =P1,P2) படித்த கடைசி இரண்டு வருடங்களும் தனியறையில் தனிமையாக பேசிக்கொள்வதற்கு கூட அந்தவீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை.. எனது நிலையை எண்ணிப்பாருங்கள் புரியும்.தனிமை மிகக்கொடுமை!!
பைத்தியக்காரர்கள் தனிமையில் சிரிப்பார்கள் பேசுவார்கள் ஆனால் தனிமையில் பேசுபவர்கள்,சிரிப்பவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் இல்லை.. ஆனாலும் இந்த பாழாய்போன தாழ்வு மனப்பாண்மையினால்.. மிக மிக கோழையாகவும், முட்டாளாகவும் இருந்திருக்கிறேன்.. துள்ளித்திரிந்திருக்கவேண்டிய என் பள்ளிநாட்களை கோழைத்தனமாக கழித்திருக்கிறேன் என இப்போது நினைக்கும் போது கூட நான் கொண்டிருந்த தாழ்வு மணப்பாண்மை மீது பெரிய வெறுப்பு ஏற்படுகிறது.. இதனால் நான் இழந்ததும் தொலைத்ததும் மிக மிக அதிகம்!! அவை மீளப்பெற முடியாதவை.. பாடசாலைகளினால் நடாத்தப்படும் இல்ல விளையாட்டுப்போட்டிகளிலோ,கல்விச்சுற்றுலாக்களிலோ நான் கலந்து கொண்டதாய் சரித்திரமே இல்லை!
நான் கிறுக்கிய சில காதல் கவிதைகளைப்பார்த்து சிலர் என்னிடம் யாரையாவது காத்லித்தீர்களா? இல்லை காதலில் தோல்வியா? அப்பிடி கேட்டதுண்டு.. இல்லவே இல்லை!! பெண்களுடன் பேசவேயில்லை, என்கிறேன்! எப்படி காதலிப்பது.. இந்த கவிதை சமாச்சாரம் கிறுக்க தொடங்கியதும் இந்த தாழ்வு மனப்பாண்மையின் ஒரு அங்கம்தான்.. அதாவது வெளியில் சகஜமாக சொல்லத்தயங்கிய சொல்லாமல்விட்ட மனதில் பூட்டிக்கிடந்த மௌனங்களை மொழி பெயர்க்கும் முயற்சி..மற்றபடி இலக்கியத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம்.. தமிழ் வார்த்தியாரைக்கண்டாலே பத்தடி தள்ளிப்போற கூட்டம் நாங்க..
நான் இந்த வலைத்தளத்தில் இதற்கு முன் எழுதிய சில வரிகளும் என் தாழ்வு மனப்பாண்மையின் தாக்கத்தை சொல்வதாகவே இருக்கும்.. இதெல்லாம் வெறும் கற்பனை என எண்ணி "அருமை" என பலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.. ஆனால் என் மனதின் வலி எனக்கு மட்டும்தான். அவ்வாறான சில வரிகள் கீழே..
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...
தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்.
கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..
கொன்றுவிட முயல்கிறேன்
இறந்தகால
தோல்விகளையும்
கோழைத்தனங்களையும்...
இந்த தாழ்வு மனப்பாண்மை விடயத்தில் பெற்றோர்களின் பங்கும் இருக்கிறது.. எனக்கு ஏற்பட்ட அந்த சிறிய உடல் குறைபாட்டை சிறிய வயதிலே சிகிச்சை மூலம் நீக்கியிருக்கலாம்.. ஆனால் அவர்கள் அதை கவனிக்கவில்லை!! இங்கே எனது பெற்றோர்களை குறை சொல்வது நோக்கமில்லையென்றாலும்.. அவர்களின் சிறிய கவலையீனத்தால்.. அதன் மூலம் நான் அடைந்த கொடுமைகள் அதிகம்.. தானாக தெளிவு பெறுவதற்கு அவகாசம் குறைவு.. பள்ளிப்படிப்பை தவிர இப்போது போல் தேடல்களோ பரந்து பட்ட வாசிப்பனுபவங்களோ அப்போது இருந்ததில்லை.. "அவனுக்கு கூச்சசுபாவம் அதிகம்" எனச்சொல்லியே வளர்த்து விட்டார்கள், ஆனால் அந்த கூச்சசுபாவம் ஏற்பட என்ன காரணம் என ஆராய மறந்துவிட்டார்கள்!!
ஆதலால் பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் உடலில் சிறிய ஒரு குறைபாடு என்றாலும் அதை சிறிய வயதிலே அகற்ற முயற்சி செய்யுங்கள்.. இல்லையேல் அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே தொலைத்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது..நானாவது இப்போது தெளிவு பெற்றேன் ஆனால் இந்த தாழ்வு மனப்பாண்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.. நண்பர்களே, சகோதரர்களே தாழ்வு மனப்பாண்மை உங்கள் மனதிலும் இருக்கிறதா.. அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய்யுங்கள்..உங்களையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறது.. கவலையை விடுங்கள்.. என் மனதில் உள்ளதை இங்கே கொட்டியது போன்று உங்கள் மனதில் உள்ளவற்றையும் நெருங்கியவர்களிடமோ பெற்றோர்களிடமோ சொல்லுங்கள்.. நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! இங்கே நான் சொன்னது இது வரை யாரிடமும் சொல்லாதது..
உங்கள் திறமைதான் உங்கள் அடையாளம் உங்கள் உடல் அல்ல!! ஏன்.. நான் கூட கடல்தாண்டி வந்து வேலை செய்வேன் என நினைத்து பார்த்ததேயில்லை.. இப்போது அபுதாபியில் நல்லதொரு வேலையில் இருக்கிறேன்..
எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!