கண்களின் பார்வை அம்புகள் போலே!


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

நினைக்க தெரிந்த மனமே என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா பாடிய ஓர் மனதை மயக்கும் பாடல் இது. வேலைப்பளு மற்றும் மனது சோர்வடையும் வேளைகளில் சில பாடல்கள் மனதை சாந்தப்படுத்தும். அவ்வகையான பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

இளையராஜாவின் அருமையான மெட்டுக்கு அழகான வார்த்தைகளை சேர்த்திருக்கிறார் கவிஞர் வாலி (என நினைக்கிறேன்) பாடல் தொடங்கும் முன் வரும் ஆரம்ப இசை மிக மிக அழகு.

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா ஜோடி சேரும் போது அப்பாடல் அநேக நேரங்களில் ஹிட்டாகிவிடுவதும் பாடல் மனதை கொள்ளை கொள்வதும் வழமை. இப்பாடலும் கேட்கும் நேரமெல்லாம் ஏதோ ஒரு பரவசம் தருகிறது.



வீண் செலவுகளும் ஆடம்பரமும்!


எனது தந்தை அடிக்கடி கூறும் விடயங்களில் ஒன்று, எந்த பொருளையும் வீணாக்ககூடாது வீணாக பயன்படுத்தக்கூடாது என்பதே.  எந்த பொருளையும் இலகுவில் தூக்கியெறிந்துவிட மாட்டார் ஒரு குண்டூசியானாலும் எடுத்து வைத்துக்கொள்வார் எப்போதாவது உபயோகப்படக்கூடும் என்ற எண்ணத்தில். அளவு கடந்த ஆடம்பரமும் அவருக்கு பிடிப்பதில்லை! இந்தப்பழக்கம் இன்றுவரை என்னிடமும் தொடர்கிறது! வாழ்க்கை கஷ்டங்களையும், வறுமையையும் புரிய வைத்து வழத்ததால், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்த போதும் வீணான செலவுகளை எதிர்கொள்ள நேர்கையில் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

அலுவலகங்களிலாட்டும் வெள்ளைத்தாள், டிஸு பேப்பர் போன்ற பொருட்களைகூட வீணாக பயன்படுத்துவோரைக்கண்டாலே ஒருவித கோபம் ஏற்படுகிறது. அவற்றை அறிவுறுத்த முடியாத நிலையில் மனதுக்குள்ளயே பொங்க வேண்டியிருக்கிறது. அப்படியே அறிவுறுத்தினாலும் அநேகரின் பதில் "இது கம்பனி சொத்துத்தானே உங்க வீட்டு சொத்து அல்லவே" என்பதுதான்! தனது வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் ஒன்றாக நினைத்து மதிக்காத வரை அவர்களின் தொழிலில் அபிவிருத்தி ஏற்படாதென்பது எனது நம்பிக்கை.

இன்றைய உலகமயமாக்கலின் சாபக்கேடுகளில் ஒன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ வீணான செலவுகளின் பக்கம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமாக வாழவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவற்றை தவிர்த்து விடவும் முடிவதில்லை பெரும்பாலான நேரங்களில். ஆடம்பரமாக வாழ நினைத்து அழிந்து போனவர்கள் பலரை என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையை ஆடம்பரமாக அமைத்துக்கொள்வதென்பது தவறல்ல. ஆனால், ஆடம்பரம் அளவுக்கு மீறி போகக்கூடாது தன்னுடைய நுகர்வு சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இன்று வெளிநாடுகளில் வேலைசெய்யும் பல இழைஞர்கள் உழைக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காகவும், கண்னை மயக்கும் பணக்கார மேல்தட்டு நுகர்வு பொருட்களுக்காகவும் செலவிட்டு மாதயிறுதியில் சிங்கில் டீக்கு கூட காசில்லாமல் சிங்கி அடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில், மேலைதேய நாட்டு முதலாளித்துவத்தினால் இநநாட்டு நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதே மெக்டொனல்ட், கே.எப்.சி போன்ற நவீன கண்னை மயக்கும் பாஸ் பூட் உணவகங்கள். இவைகளில் ஒரு கோழி துண்டு வாங்கும் காசிற்கு முழு குடும்பத்திற்கும் தேவையான கோழி வாங்கி சமைத்தோ பொறித்தோ இன்னும் சுவையாக சாப்பிடலாம்.

இப்பொழுதெல்லாம் இதுமாதிரியான உணவகங்களில் சாப்பிடுவதுதான் கௌரவம் என்றாகிவிட்டது.
நான் முன்பு எழுதிய குட்டி கவிதைகளில் ஒன்று நியாபகத்துக்கு வருகிறது.

கே எப் சி
கோழி சாப்பிட வேண்டும்
நீண்டநாள் ஆசை
நிறைவேறியது!
நீண்டநாளாய் வளர்த்த
வீட்டுச்சேவலை
விற்றதின் மூலம்!

இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிறைய பேரின் வாழ்க்கை முறை!

எங்கள் தந்தை எங்களை விட்டுப்பிரிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது :-(

பாகிஸ்தானின் மிக மோசமான தொடர் தோல்வி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகளைக்கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 4-1 என்று படு தோல்வி அடைந்திருக்கிறது.தோல்விகள் என்பது சகஜமானதுதான். ஆனால், தோற்ககூடாத விதத்தில் தோற்பதுதான் மிக மோசமானது. அப்படியான ஒரு நிலையில்தான் பாகிஸ்தான் அணி உள்ளது.  

அனேகமான சந்தர்பங்களில் அவர்கள் தோற்கடிக்கப்படுவதில்லை அவர்களாகவே தோல்வியை உருவாக்கிக்கொள்கிறார்கள். முதல் போட்டியிலும் நான்காவது போட்டியிலும் நடந்தது இதுதான். வெற்றியின் விளிம்பிற்கு சென்று தோல்வியை சுவைத்தார்கள். எதிரணிக்கே ஆச்சர்யப்படவைக்கும் அவர்களுக்கு எப்படி  வெற்றி கிடைத்தது என்று! 
முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருக்கிறது. பந்துவீச்சு ஓரளவுக்கு பரவாயில்லை. UAE யில் விளையாடுவதென்பது அவர்களின் சொந்த நாட்டில் விளையாடுவது போன்றது அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம். அப்படியான ரசிகர்களை எரிச்சலடையாவைத்து ஏமாற்றியிருக்கிறது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி. எத்தனை ஆக்ரோஷ்மான சிறப்பான துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய அணியா இப்படி சொதப்பலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டுகிறது.

ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்களின் ஓய்விற்குப்பின் புதிய வீரர்கள் வந்து அவ்விடங்களை நிரப்பி விடுகிறார்கள். இந்திய அணியை பொருத்தவரை சச்சின், கங்குலி,ட்ராவிட், சேவாக்கின் இடங்களை புதியவர்களான கோஹ்லி,ரோஹித்,தவான்,ரெய்னா,யுவராஜ் போன்றோர் நிரப்பி அணியை வெல்ல வைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் சயிட் அன்வர், இன்ஷமாம், மொஹம்மட் யூசுப், யூனிஸ் கான் போன்றவர்கள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்புவதற்கு சரியான வீரர்கள் இன்னும் அமையாமல் இருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு சில வீரர்கள் அபாரமாக சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக பிரகாசிக்க தவறுகின்றனர். சிறப்பான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களே அவர்களின் நீண்டகால தேவையாக இருக்கிறது.  

நசீர் ஜெம்சத், உமர் அக்மல், அசாத் சபீக் போன்றவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை தந்தாலும் தற்போது தொடர்ச்சியாக சறுக்குகிறார்கள். ஆனாலும் உமர் அக்மல் மேல் நம்பிக்கை இருக்கிறது அவரால் இதைவிட சிறப்பாக விளையாட முடியும் ஆனால் அவர் 3வது அல்லது 4வது வீரராக களமிறக்கப்பட வேண்டும். அதிகமான போட்டிகளில் அவர் வருவது அதிக விக்கட்டுக்களை இழந்து அணி இறுக்கமான நிலமைகளில் இருக்கும் போதுதான். அவ்வாறான நிலமைகளில் அவசர ஓட்டக்குவிப்பிற்கு சென்று ஆட்டமிழந்து செல்கிறார். ஜெம்சத் நல்ல டெக்னிக்கலான துடுப்பாட்ட வீரர்தான் என்றாலும் அவரின் துடுப்பாட்டத்தில் ஆக்ரோசமும் நம்பிக்கையும் இல்லை. 

உமர் அமீன்,அசாத் சபீக் போன்றவர்களுக்கு அணியில் இடம்கொடுக்க தேவையில்லை. ஹபீஸ், அப்ரிடி இருவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் துடுப்பாட்டம் மிக மோசமானது. இவர்களை ஒருநாள் அணியில் வைத்திருப்பதா துரத்துவதா என்பது 50/50 வாய்ப்புள்ளது அடுத்தது தலைவர்  மிஸ்பாவுல் ஹக். இவரின் நிலமைதான் பரிதாபம். அண்மைக்காலமாக தனியொருவராக போராடி வருகிறார்.. ஆனாலும் வெற்றிக்கு இது போதுமானதாக இல்லை. மிஸ்பாவின் தலைமைத்துவமும் துடுப்பாட்டமும் விமர்சனத்துக்குறியது. அவர் மேற்கொள்ளும் தடுத்தாடும் முறையானது இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வெற்றிகளை கடினமாக்குவதுடன் கடினமான வெற்றிகளை பெற முடியாமலே செய்து விடுகிறது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் எப்போதும் ஆக்ரோசமாக விளையாடும் பாகிஸ்தான் அணி அந்த தன்மைகளை இழந்து எல்லோரும் அவர் போலவே ஒரு வித நிச்சயமற்ற தன்மையுடன் துடுப்பெடுத்தாடுவதை கான முடிகிறது. இவற்றுக்கெல்லாம் நடுவில் சொஹைப் மக்சூத் புதிய வீரர் இத்தொடர் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரின் துடுப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கையளிப்பதும் சிறப்பானதாகவும் இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அரைச்சதங்கள். 

தெண்ணாபிரிக்க அணிக்கும் தலைவர் வில்லியர்சுக்கும் வாழ்த்துச்சொல்லும் அதேவேளை அவரின் சிறப்பான தலைமைத்துவமும் அதற்கேற்ற பொறுப்பான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு பிறகு ஏனைய மூத்த இளைய வீரர்களின் ஒருங்கினைந்தே பங்களிப்பே இவ்வெற்றியை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.


சவூதி நிதாகாத் சட்டமும், இந்திய முகாமைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களும்.

சவூதி அரேபியா நிதாகாத் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக அறியமுடிகிறது நிதாகாத் சட்டம் என்பது, அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இந்தச்சட்டம் எல்லா துறைகளிலும் நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்ற சந்தேகம் இருந்தாலும் இச்சட்டம் வரவேற்க தகுந்ததாகும். காரணம், குறைந்தபட்சம் நிர்வாக முகாமை நடவடிக்கைகளிலாவது உள்நாட்டு பணியாளர்கள் அமர்த்தப்படும் போதுதான் வெளிநாட்டு (குறிப்பாக இந்தியா) நிர்வாக முகாமைகளால் அடிமட்ட தொழிலாளர் நலன் களில் மேற்கொள்ளப்படும் சுரண்டல்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிகமான வெளிநாட்டினரின் வேலை பறிபோகும் அபாயமும் இச்சட்டத்தினால் ஏற்படாமல் இல்லை.

சவூதி அரேபியாவில் எப்படியோ தெரியவில்லை குறிப்பாக இங்கே ஐக்கிய அரபு ராச்சியத்தில் (UAE) பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் நிர்வாக முகாமை பொறுப்புகள் வெளிநாட்டவரின் கையிலேயே உள்ளது. அதிலும் அதிகமாக இந்தியர்களிடம்! இப்படியான வெளிநாட்டு முகாமைகள் அவர்களின் சுயநலன் சார்ந்து மட்டுமே அதிகமான நேரங்களில் சிந்திப்பதினால் அடிமட்ட தொழிலாளர் நலன்களில் அக்கறை கொள்வதில்லை. சராசரியாக பார்க்கப்போனால் சிறுபாண்மையினராக இருக்கும் இந்த நிர்வாக முகாமையினரே நிறுவனத்தின் 90 வீதமான நலன்களை அனுபவிக்கின்றனர் பொருளாதார ரீதியாகவும் ஏனைய வசதி வாய்ப்புகள் மூலமாகவும். ஆனாலும் நிறுவனத்தில் பெரும்பாண்மையாக இருக்கும் கடினமான உடல் உழைப்பை வழங்கும் அடிமட்ட தொழிலாளர்கள்(அலுவலக ஊழியர்கள் உட்பட) 10 வீதமான நலன்களையே அனுபவிக்கின்றனர். இதே இடத்தில் உள்நாட்டு/வெளிநாட்டு நிர்வாகத்தினர் இருக்கும் பட்சத்தில் பக்கச்சார்பாக நடந்து கொள்ள முடியாமல் போகும் அதேவேளை எல்லோருக்கும் குறைந்தபட்ச நலன்களாவது கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் குறிப்பாக வெள்ளைக்கார ஐரோப்பிய தனியார் நிர்வாக முகாமைகள் தொழிலாளர்களின் நலன் சலுகைகள் விடயத்தில் ஓரளவுக்காவது நியாயமாக நடந்துகொள்வதை கவனிக்க முடியும்.

இந்திய நிர்வாக முகாமைகளில் குறிப்பாக கேரளாவைச்சேர்ந்த மலயாளிகளின் பொறுப்பிலிருக்கும் நிர்வாகத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக பக்கச்சார்பாக நடந்து கொள்வது அப்பட்டமாக தெரியும். மலயாளிகள் என்றால் உயர்ந்த சலுகைகளும் பதவிகளும். தமிழ்நாட்டுக்காரங்களுக்கு, இலங்கையர்களுக்கு, பிலிப்பின் காரர்களுக்கு ஒரு விதமாகவும் பங்காளிகள்,பாகிஸ்தானியர்கள் என்றால் மிக மோசமாகவும் நடந்து கொள்ளும் புத்தியே அதிகமான மலயாளிகளிடம் உள்ளது.

எஜமானர்களுக்கு விசுவாசமும் இலாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக Cost Cutting என்ற பெயரில், கொதிக்கும் வெயிலில் கட்டிட வேலை, துப்பரவு வேலை இன்ன பிற வேலைகள் செய்யும் அடி மட்ட தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களுக்கு நியாயமாக கொடுக்க்படவேண்டிய சம்பள உயர்வுகளை வழங்காமல் வஞ்சிக்கும் அநேக தனியார் நிறுவனங்கள் இங்குண்டு.. இவ்வாறான தொழிலாளர் பிரச்சினைகளுக்கு போகிற போக்கில் நிறுவன உரிமையாளர்களான் அரபுக்களை மட்டும் குற்றம்சாட்டிவிட முடியாது. காரணம் முதலீடு செய்வதும் உயர்மட்ட முடிவுகளை எடுப்பது மட்டுமே அவர்களின் கைகளில் இருக்கும்.. ஏனைய தொழிலாளர் விடயங்கள் அனைத்தும் நிர்வாக முகாமைகளின் கீழே வரும். ஆகவே முகாமைகள் தொழிலாளர் நலன் சம்பந்தமாக பரிந்துரைக்கும் பட்சத்தில் அரபுக்கள் அவற்றை நிராகரிக்க போவதில்லை என்பது நிச்சயம். மற்றப்படி நிறுவன உரிமையாளர்களான அரபுக்களால் ஒவ்வொரு தொழிலாளர்களினதும் பிரச்சனைகளை கண்டுகொளவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

இச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு பணியிடங்களுக்கு உளநாட்டவர்கள் அமர்த்தப்பட்டாலும், சொகுசாக வாழ்ந்து பழகிய அவர்களால் வெளிநாட்டவர்கள் போல் கடின உழைப்பை வழங்க முடியுமா என்பதும் சந்தேகமே. பிறகு அவர்களின் வேலையை செய்ய இன்னுமொரு வெளிநாட்டவர் அமர்த்தப்படலாம் அல்லது இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம். இங்கே அரச அலுவலகங்களில் வேலை பார்க்கும் உளநாட்டவர்களை கவனித்தாலே இந்த உண்மை புரியும்.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...