சில நேரங்களில் சிலரால் செய்யப்படும் சின்ன சின்ன உதவிகளில்தான் மனிதநேயமே தங்கியிருக்கிறது.போட்டியும் பொறாமையும் காசும் பணமுமே வாழ்க்கையாகிப்போன நவீன உலகில் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல், தன் செயல்களால் இன்னொருவர் துன்பம் நேராம்லிருக்க வாழ்வதும் நல்ல மனிதனுக்குரிய பண்புகள்தான் என நினைப்பவன் நான். நடை பாதையில் கிடக்கும் முற்களை எடுத்து ஓரமாக போடுவதும் தர்மம் செய்வதைப்போன்ற நண்மையான செயல் என இஸ்லாம் சொல்கிறது.
ஆனாலும் சமூகமாக வாழும் போது அவனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள.. தொழில்களை மேற்கொண்டு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சமூகத்துடனான தொடர்பு மிக அத்தியவசியமாகிறது. இதற்காக பலரையும் பல வேளைகளில் சந்திந்து பல வேலைகளை அவர்கள் மூலமாக செய்ற்படுத்த வேண்டியிருக்கிறது. இது பல வேளைகளில் பணப்பரிமாற்ற சேவை அடிப்படையில் நடக்கிறது.
ஆனாலும் சில உதவிகள் சில நேரங்களில் அவசரமாக செய்ய வேண்டியவை.. அவசரமாக தேவைப்படுபவை! இவ்வாரான உதவிகள் பணம் கொடுத்து வாங்க முடியாதவை. உதாரணமாக பேரூந்தில் பயணிக்கும் போது முதியவர்களுக்கோ, முடியாதவர்களுக்கோ தன் இருக்கையை கொடுத்து உதவுவது, ஒரு குறிப்பிட்ட இடம் தெரியாமல் கேட்பவர்களுக்கு சரியான இடத்தைக் காட்டி கொடுப்பது போன்ற சின்னச்சின்ன உதவிகள்தான் மனிதன் சமூகமாக வாழ்வதில் உள்ள பயன்கள்.ஆனாலும் பல நேரங்களில் இவ்வாரான சின்ன உதவிகளைக்கூட சிலர் செய்ய தயங்குவதை நாம் கண்டிருக்கிறோம். அண்மையில் இங்கே (அபுதாபியில்) பேரூந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது (நான் நின்று கொண்டிருந்தேன்) அப்போது குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு ஒருவர் ஏறினார். யாராவது எழுந்து சீட் கொடுப்பார்கள் என்று பார்த்தால் எவருமே சீட்கொடுக்க முன்வரவில்லை. சிறிது நேரம் நின்றுகொண்டே வந்தபின் ஒருவர் இறங்கியவுடந்தான் ஒரு சீட் கிடைத்தது அதிலும் உட்கார்ந்திருந்ததில் இளைஞர்கள் பலர்! அதுவும் அந்த வண்டி தூரப்பிரயாணம் போவதுமில்லை மிஞ்சிப்போனால் அதில் பயணிப்பவர்கள் 40 அல்லது 50 நிமிடங்கள்தான் பயணிப்பார்கள். அப்படியிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நிற்பவருக்கு தனது சீட்டை விட்டுக்கொடுக்க முன்வராதது என்னவிதமான மனநிலை என புரியவேவில்லை.